Pages

Wednesday 16 August 2023

சூழலியல் கரிசனமும் மார்க்சியமும்

 



அண்மைக்கால சூழலியல் சிக்கல்களை மார்க்சிய விமர்சன நோக்கில் அணுகும் போது,நமது சூழல்வாதிகள் மார்க்சியர்களை நோக்கி சில விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.குறிப்பாக,மார்க்சிய தத்துவமானது ஐரோப்பிய சமூகத்தை ஆய்வு செய்து முன்வைத்த கோட்பாடாகும்;அது இந்தியாவிற்கு பொருந்தாது என்பதாகும்.இரண்டாவதாக,மார்க்சின் முதலாளித்துவ பகுப்பாய்வானது,வர்க்கப் போராட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகும்.ஆகவே மார்க்சியத்தின் வழியே சமகால  சூழலியல் சிக்கல்களை பாகுப்பாய்வு செய்ய இயலாது என்பதாகும்.

இவ்வாறாக  மார்க்சை முன்வைத்தும்,மார்க்சியத்தை முன்வைத்தும் நவீன பொருளாதார அறிஞர்கள்,சூழல்வாதிகள் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் உண்மை என்னவோ இவர்களின் கூற்றுக்கு நேர்மாறாக உள்ளது.அதாவது முன்னைக்காட்டிலும் மார்க்சின் வாதங்கள் தற்போதைய நெருக்கடி நிலையில் க முக்கியத் தேவையாக உள்ளது.மார்க்சியத்தின் எதிரிகளே தற்போது மார்க்சை ஏற்றுக்கொள்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.உதாரணமாக கடந்த  2008ஆம் ஆண்டில்,இத்தாலி,ஸ்பெயின் போன்ற நாடுகளில்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையானது உலகின் புதிய அடுக்கை குலைப்பதாக  அமைந்தது.பொதுவாக சந்தையின் உள்ளார்ந்த விதிகளே மாயவித்தைகள் செய்து அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடும் என கட்டியம் கூறி வந்த முதலாளித்துவ அறிவுஜீவிகள் முழித்துக்கொண்டு நின்றனர்.

மார்க்சு ஏன் தேவை:

இன்றைய முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது உழைப்புச் சுரண்டலிலும்  இயற்கை வளச் சுரண்டலிலும் முன்னைக்காட்டிலும் மிக வலுவாக கொள்ளையடிக்கிற அமைப்பாக முன்னேறிவிட்டது.இதில் ஐராப்பிய கண்டமோ ஆசிய கண்டமோ ஆப்பிரிக்க கண்டமோ விதிவிலக்கல்ல.நாட்டின் கனிமவளங்களை வரை முறையற்ற வகையில் கொள்ளையடிப்பது,ஆபத்தான நச்சு கழிவுகளை நிலத்திலும் நீரிலும் காற்றிலும் கலந்து சூழலிலுக்கு கேடு விளைவுப்பது ஆகிய சூழலியல் சீர்கேடுகளை இன்று அனைத்து நாடுகளும் பொதுவாக எதிர்கொண்டு வருகின்ற பிரச்சனைகள் ஆகும்.இங்கே தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை என்றால் இத்தாலியில் இல்வா ஆலை;இங்கே கூடங்குளம் அணுவுலை என்றால் ஜப்பானில் புகிசிமா அணு உலை.இந்தியாவிலே அதானி நிறுவனம் காடழித்து நிலக்கரி எடுக்கிறது என்றால் ஆஸ்திரேலியாவில் ரியோ டின்டோ நிறுவனம் அதைச் செய்கிறது.ஆக.பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை சுரண்டுவதிலும் கேடு விளைவுப்பதிலும் ஒரே விதமாக செயல்பட்டு வருகின்றனர்.கார்பரேட்களுக்கு எதிராக அமேசான் காடுகளை காப்பாற்ற போராடிய சூழல் போராளிகளும் இந்தியாவில் கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடிய  சூழல்வாதிகளும் ஒரே காரணத்திற்காகதாக் படுகொலை செய்யப்படுகிறார்கள்.உலகெங்கிலுமே முதலாளித்துவ உற்பத்தி முறையின் கோர வடிவம் ஒரே விதமாகத் தான் உள்ளது.

மார்க்சின் முக்கிய பங்களிப்பே முதலாளித்துவ அமைப்பின் இந்தக் கோர முகத்தை, அதனது அராஜகத்தை அறிவியல் பூர்வமாக அம்பலப்படுத்தியதாகும்.முதலாளித்துவ திறனாய்வை மார்க்சைத் தவிர்த்து வலுவாகவும்,ஆழமாகவும் இதுவரை எவரும் முன்வைத்ததில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.முதலாளித்துவ அமைப்பு குறித்த மார்க்சின்  பகுப்பாய்வு மட்டும் நமக்கு இல்லாமல் போனால்,அவ்வமைப்பினில் வாழத்தளைப்பட்ட மக்களுக்கு அது குறித்த புரிதல் இல்லாமலே போயிருக்கும்.குறிப்பாக முதலாளித்துவத்தின் பொருளாதார இயக்க விதிகளைமூலதனம் நூலின் வாயிலாக மார்க்சு விளக்காமல் விட்டிருந்தால் முதலாளித்துவ அமைப்பின்  முக்கியபோக்கான அதன் இயக்கத்தைபுரிந்துகொள்வதென்பது நவீன மனித சமூகத்திற்கு சாத்தியப்படாமலேயே போயிருக்கலாம்.

மார்க்சியம் மற்றும் மார்க்சு மீதான விமர்சனங்களுக்கான நமது பதிலானது மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலானது.அது வர்க்கசுரண்டல் மற்றும் சூழலியல் சிக்கல்களைப் பேசுவதாகும்.அப்பதிலை நாமொரு பொருளாதார மார்க்சியரின் வழி நின்று சொன்னால் இன்னும் பொருத்தமுடையதாக இருக்கும்.”மூலதனத்திற்கு அப்பால்”எனும் தனது நூலின் முதல் பகுதியே “மார்க்சு எதற்காக?”என்ற தலைப்பின் கீழ் மூலதனத்தின் வரலாற்றை, பொருளாதார மார்சியரான மைக்கல் லேபோவிட்சு விரிந்துரைக்கிறார்.

மார்க்சியத்தை நாம் பொருளாதார கோட்பாட்டு அளவோடு சுருக்கக்கூடாது. சுரண்டலை மையப்படுத்திய சமூகத்தையோ,முழு வளர்ச்சியை நோக்கிய மனித ஆற்றலை கட்டுப்படுத்தும் விதத்திலான சமூகத்தையோ மார்க்சியம் நிராகரிக்கும்.மனிதனின் தேவைக்காக அல்லாமல் தனியாரின் லாபத்திற்கான வர்க்கச் சார்பாக எடுக்கப்படுகிற சமூக முடிவுகளுக்காக முதலாளித்துவத்தை மார்க்சியம் எதிர்க்கிறது.அதன் லாப நோக்க உற்பத்தி முறைக்காக இயற்கை வளங்களை,மனித வளங்களை சிதைப்பதும்,பாலின,மொழி  பாகுபாட்டினை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்வதும் முதலாளித்துவத்தின் இயல்பான போக்காக மார்க்கியம் பார்ப்பதால் மட்டுமே அதற்கெதிராக போராட வலியுறுத்துகிறது.

முதலாளித்துவத்தின் பொருளாதார “வளர்ச்சி மாதிரி”

இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக உலக நிதி மூலதனமே திகழ்கிறது.பன்னாட்டு நிதியகம்,உலக வங்கி போன்ற உலக தழுவிய கட்டமைப்புகள் மூலமாக எந்த நாட்டிலும் தலையிட முடிகிறது.நழிவடைந்துள்ள நாடுகளோ தனது நாட்டின்  பொருளாதார கட்டுப்பாட்டை உலக நிதி மூலதனத்திடம் இழந்து,அதற்கிசைவான நோக்கத்திற்கு செயல்படும் அளவோடு சுருங்கிவிட்டது. ஆகவே இன்றைய சமூகம் மற்றும் சூழலியல் சிக்கல்களுக்கு காரணமாக  இருகின்ற.முதலாளியத்தின் லாப நோக்க உற்பத்தி முறையை அதனால் கட்டுப்படுத்த இயலவில்லை.அதனால்தான்  ஐநாவின் காலநிலை மாநாட்டுத் தீர்மானங்களால் சூழலியல் அழிவுகளை தடுத்து நிறுத்த இயலவில்லை.இதை மார்க்சியர்கள் மட்டுமே உள்ளது உள்ளவாறு விளக்கமுடியாது.



இன்றைய நவீன முதலாளித்துவ கட்டத்தில்,பொருளாதாரமே, அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுத்துள்ளது.இதற்கு முந்தையச் சமூகக் கட்டங்களில் அரசியல் அதிகாரமே பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தது.அதாவது ஒரு பேரரசிற்கு திறை செலுத்தும் சிற்றரசுகள் போன்ற ஒரு மையப்படுத்தப்பட்ட அரசமைப்பில் பொருளாதாரம் அரசியல் ஆளுமைக்கு உட்பட்டு இருந்தது.அதன் பின்னான வணிக மூலதன காலகட்டத்திலும் இதுவே தொடர்ந்தது.ஆனால் இன்றோ இதற்கு நேர்மாறான நிலையே நிலவுகிறது.அதனாலேயே இன்று உழைக்கும் வர்க்கமும்,இயற்கை  வளங்களும் முதலாளித்துவத்தின் லாப நோக்க உற்பத்தி முறைக்காக சுரண்டப்படுகிறது.முதலாளித்துவ சமூகத்தால்  வளர்தத்தெடுக்கப்பட்ட  இப்பொருளாதார அம்சம் குறித்து,பொருளாதார  மார்க்சியரான சமீர் அமீன் கூறுவதாவது.

பொருளாதாரம்என்னும் வார்த்தைக்கு அதிக அழுத்தம் முதலாளியத்தால் வழங்கப்பட்டதாகும்;முதலாளியத்திற்கு முந்திய சமுதாய அமைப்புகளில் அரசியலும்,சித்தாந்தமும் ஆதிக்க நிலையில் இருந்தன.ஆனால் முதலாளியம் பொருளாதாரத்திற்கு ஆதிக்க நிலையை அளித்தது.அதாவது முந்தைய அமைப்புகளில் அரசியலும்,சித்தாந்தமும் ஆதிகத்தின் மூலாதாரங்களாக அமைந்தன.ஆனால் முதலாளியத்தில் செல்வமே அதிகாரத்தின் அடிப்படை.வேறு வகையில் கூறினால்,மதிப்பு விதி முதலாளியத்தின் பொருளாதார அம்சத்தை மட்டும் அல்லாமல் அதனுடைய சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஆள்கிறது.

இந்நிலையில் இனநெருக்கடியில் இருந்து  விடுபட,முதலாளித்துவத்திற்கு எதிராக போராட,அதற்கெதிரான மாற்று சமூகத்தை கட்டியெழுப்ப நம்முன் உள்ள ஒரே வாய்ப்பு மார்க்சியம் மட்டுமே.ஏனெனில்,மார்க்சியம் மட்டுமே மனித இனத்தின் நீடித்த வளர்ச்சிக்கான மாற்று முகாமை காட்டுகிற தத்துவமாக உள்ளது.


இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை- விளைவுகளும் காரணங்களும்

 


கடந்த ஜூலை 20 ஆம் தேதி  முதல் அரிசி (பாசுமதி அரிசி நீங்கலாக) ஏற்றுமதிக்கு இந்திய ஒன்றிய அரசு தடைவிதித்தது. அரிசியின் சில்லறை விற்பனை விலை கடந்த ஓராண்டில் மட்டும் 11.5 விழுக்காடு உயர்ந்துள்ளதாலும் மேற்கொண்டு  அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்துவதன் பொருட்டு அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக அரசு கூறியது.அரசின் இந்த திடீர் தடையால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அரிசி கிடைப்பதில் தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.குறிப்பாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அரிசி வாங்குவதற்காக கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கிற படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.சில கடைகளில்,நீண்ட வரிசைகளையும் கூட்டத்தையும் சமாளிப்பதன் பொருட்டு ஒரு குடும்பத்திற்கு ஒரு அரிசிப்பை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டுடன் அரிசி விற்பனை நடக்கிறது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் சுமார் 15 விழுக்காடு அளவிற்கு விலைவாசி உயர்கிற அபாயம உள்ளதாகவும்,உடனடியாக  இந்த தடையை இந்திய அரசு நீக்கவேண்டுமென சர்வதேச நாணய நிதியகத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரான பியர் -ஒலிவியா குஹாஷன் கூறியுள்ளார்.உலக வங்கியோ,இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் சர்வதேச சந்தையில் அரிசியின் விலை சுமார் 52 விழுக்காடு அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கிறது.முன்னதாக ரஷ்யா-உக்ரைன் போரால்,கோதுமை விலை உயர்வு நெருக்கடி ஏற்பட்டது போல அரிசி விலை உயர்வும் ஏற்படப்போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சர்வதேச அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 விழுக்காடாகும். 2022-23 ஆண்டில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.இந்தியாவிற்கு அடுத்த தாய்லாந்துவியட்நாம்,பாகிஸ்தான் ஆகிய  நாடுகள் அரிசி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளன.இந்தியா,தனது ஏற்றுமதியின்  பெரும்பங்கு சீனாவிற்கும்,அமெரிக்காவிற்கும் மேற்கொள்கிறது.கடந்த 2022 ஆம் ஆண்டில் 22.2 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்தது.இது உலக அரசி சந்தையில் தாய்லாந்து,வியட்நாம்,பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் மொத்த அரசி ஏற்றுமதிக்கு ஈடாகும்.

பருவம் தப்பிய மழை பொழிவும் அரிசி உற்பத்தி சரிவும்

அரிசி ஏற்றுமதி தடைக்கான ஒன்றிய அரசின் விளக்கத்தில்  பகுதி உண்மை  மட்டுமே உள்ளது.அதாவது அரிசி சந்தையின் அளிப்பு(supply)-தேவை(Demand)சுற்றோட்டத்தில்,தேவைப் பகுதியை மட்டுமே விளக்குகிற அரசு அளிப்பு பற்றி வாய் திறக்கவில்லை.நாட்டின் அரிசி தேவையை பூர்த்தி செய்கிற நேரடி உற்பத்தியாளர்களாக விவசாயிகளே உள்ளனர்.நெல் சாகுபாடியின் உற்பத்தியை தீர்மானிப்பதில் இயற்கையின் தட்வெட்ப நிலை முக்கிய பங்காற்றுகிறது.சமநிலையான பருவகாலமும் அதீத மழை அல்லது மழை பற்றாக்குறை கொண்ட சமநிலையற்ற பருவகாலமும் விளைச்சலை நேரடியாக பாதிக்கிறது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பொழிகிற ஜூன் –ஜூலை மாதத்தில் மேற்கொள்கிற சாகுபடியை காரீப் காலம் என்றழைப்பார்கள்.காரீப் என்றால் அரபியில் இலையுதிர்காலம் என்று பொருள்.இந்த காரீப்பருவத்தில், பஞ்சாப்,கங்கைச் சமவெளி,கோதாவரி படுகை மற்றும் தமிழநாட்டில் காவிரிப் படுகை ஆகிய பகுதிகளில் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த ஆண்டை விட இந்தாண்டில் சுமார் எட்டு விழுக்காடு அளவிற்கு நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக பயிர்-பருநிலை கண்காணிப்புக் குழு தெரிவிக்கிறது.மேலும் இந்தாண்டு பருவமழையை பொறுத்தவரை நாம் மேலே குறிப்பிட்ட நெல் சாகுபடி மண்டலங்களில் மொத்தமுள்ள 718 மாவட்டங்களில் 294 மாவடங்களில் மழை பற்றாக்குறையாக பொழிந்துள்ளது.அதாவது இயல்பைவிட சுமார் 41 விழுக்காடு மழை பற்றாக்குறையாக பொழிந்துள்ளது.இந்தியாவில் பரவலாக நெல் சாகுபடி செய்கிற மாவட்டங்களில் நிலவிய மழைப் பற்றாக்குறை நிலைமையும்,கடந்த ஆண்டை விட குறைவான பரப்பளவில் நடைபெற்ற நெல் சாகுபடியும் நெல் உற்பத்தியை நேரடியாக பாதித்தது.இந்நிலைமை வரும் மாதத்தில் தொடர நேரிட வாய்ப்புள்ளதால் 180  நாட்களாக பதிலாக 120 நாட்களில் அறுவடை செய்கிற குறுகிய  நெல் ரகங்களை பயிரிட வேண்டுமென  இந்திய வானிலை ஆய்வு மையம் விவசாயிகளிடம் அறிவுறுத்துகிறது.

பொதுவாக இந்தியாவில் ஜூன் 8 இல் பருவமழைக் காலம் தொடங்கும்.ஆனால் நடப்பாண்டில் எட்டு நாள் தாமதாகவே தொடங்கி இருபது நாள் முன்னதாகவே நின்று விட்டது.அதேநேரத்தில் வடக்கிலும் வடமேற்கிலும் குறைவான காலத்தில் அதிகமாக பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஹரியானாவில் பெய்த கனமழையால் யமுனையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது;ஹிமாச்சல பிரதேசத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பெய்த கனமழையால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது;போலவே.சண்டிகரில் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக மழை பொழிந்துள்ளது. உத்திரப் பிரதேசத்தில் பெய்து வருகிற தொடர் மழையின் காரணமாக வரலாறு காணாத வகையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டின் பருமழைகாலத்தில்,வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் நிகழ்ந்த  அதீத மழை பொழிவும்,தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களின் மழை பற்றாக்குறையும் விவசாயிகளின் விளைச்சலை நேரடியாக தாக்கின.

பருநிலையில் ஏற்பட்டுவருகிற இந்த மாற்றங்களுக்கு காலநிலை மாற்ற நெருக்கடியே முக்கிய காரணமென பருவநிலை ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.அதீத மழை பொழிவு என்பது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால்  பருவமழை பொழிகிற பண்பில் மாற்றம் ஏற்பட்டு,ஒரு சில மாதங்களில்  பொழிய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் திடுமென பொழிவதைக் குறிக்கிறது.அதீத மழை ஒரு பக்கம் என்றால் அதீத வெயில் தாக்கமும் மற்றொருபுறம் நம்மை தாக்குகிறது.இந்த மாற்றங்களுக்கு எல் நினோ காரணமாக இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை 'எல் நினோ' என்கின்றனர் ஆய்வாளர்கள். நடப்பாண்டில்எல் நினோ” தாக்கத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வானிலை ஆராய்ச்சி அமைப்பான (US National Oceanic and Atmospheric Administration - NOAA) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதே அமைப்பு இந்தியாவில் தற்போது  பருவமழைக் காலத்தில் சில வாரங்கள் தடை பட்டு பிறகு மீண்டும் கிழக்கு மாநிலங்களில் மழை தொடங்கும் எனக் கூறியுள்ளது.

தொகுத்துப் பார்ப்பின்,காலநிலை மாற்ற சிக்கலின் விளைவானது, நெல் உற்பத்தி அளவை நேரடியாக பாதித்துள்ளதை புரிந்துகொள்ளலாம்.நெல் சாகுபடி பரப்பளவுக் குறைவும்,பருவமழைத் தாக்கத்தால் உற்பத்தி சரிவும் நாட்டில் நெல் விலையை அதிகரிக்க வைத்தன.மேற்கொண்டு இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்துகிற நடவடிக்கையாக அரிசி ஏற்றுமதியை ஒன்றிய அரசு தடுக்கிறது.ஏற்றுமதி தடையால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.இயற்கையின் சுழற்சியில் ஒன்றுக்கொன்று எப்போதும் தொடர்புடையது.இந்த சங்கிலித் தொடர் விளைவுகள் குறித்து இப்போதுதான் ஒவ்வொன்றாக ஆட்சியாளர்களுக்கு புரியவருகிறது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு,கபினியில் மழை பொழிந்தால்தான் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூரில் நீர் திறக்க முடியும்.நடப்பாண்டில் சரியாக மேட்டூரில் நீர் திறந்துவிடப்பட்டாலும்,காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைவால்,மேட்டூருக்கு நீர் வரத்து குறைந்ததுஇதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைந்தது.இந்த காலகட்டத்தில் காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு மறுத்ததால்,தமிழ்நாட்டிற்கும் கர்நாடக அரசிற்கும் அறிக்கைப் போர் நடந்தது.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி நீரைக் கொடுத்தாகவேண்டும் என்றது தமிழக அரசு.கர்நாடக அரசோ நீர் குறைவாக உள்ளதாக கூறியது.தற்போது ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.அரசியல் பதட்டமும் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.

பருவமழையில் ஏற்படுகிற சிற்சில மாற்றங்கள் கூட மாநிலங்களுக்கு இடையே பதட்டத்தையும் மோதலையும் அரசியல் சமநிலையில் பாதிப்பையும் ஏற்படுத்துகிற ஆற்றல் கொண்டது.போலவே வேளாண் உற்பத்தி சரிவிற்கு இட்டுச் சென்று உணவுப் பாதுகாப்பையும் வீழ்ச்சியடையச் செய்கிற ஆற்றல் கொண்டது.காலநிலை மாற்றம் என்ற சிக்கலானது இனியும் சாதராணமாக கடந்து போகிற விஷயமாக இருக்கப்போவதில்லை.

சான்றாதாரம்:

https://www.indiatoday.in/diu/story/non-basmati-white-rice-ban-by-union-government-export-diu-story-2413209-2023-07-28

https://www.bbc.com/tamil/articles/c4n5dz7mkz2o

https://www.downtoearth.org.in/news/agriculture/it-s-make-or-break-for-rice-production-in-monsoon-2023-90895

https://www.downtoearth.org.in/news/agriculture/monsoon-2023-two-weather-phenomena-to-decide-fate-of-agriculture-in-indo-gangetic-belt-90775

 

 நன்றி:ஜனசக்தி 


Friday 4 August 2023

கோவை சூயஸ் குடிநீர் திட்டம்:ஏன் கைவிடப்பட வேண்டும்?

 


தென்னகத்தின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுகிற கோவை நகரம் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரமாகும்.2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தில் சுமார் 10.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இந்நகர மக்களின் குடிநீர் தேவையை சிறுவாணி திட்டமும் பில்லூர் திட்டமும் பூர்த்திசெய்து வருகிறது.இந்நிலையில்,கோவை மாநகரத்திற்கு 24 மணி நேரமும் (24x7 ) தங்குதடையற்ற வகையில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்கிற திட்டமொன்றை கடந்த 2018  ஆம் சூயெஸ் என்ற பிரான்சு நிறுவனத்திற்கு வழங்கியது அன்றைய அஇஅதிமுக அரசு.சுமார் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டமே,இந்தியாவில் சூயெஸ் நிறுவனம் வென்ற மிகப்பெரிய திட்டமென அந்நிறுவன இணைய செய்தி அறிவித்தது.முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டில் தலைநகர்  டில்லி மாநகராட்சியின்  குடிநீர் விநியோக திட்டத்தை வென்ற இந்நிறுவனம் படிப்படியாக பெங்களூரு,கொல்கத்தாவில் கிளை பரப்பி தற்போது  தமிழ்நாட்டில் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக சேவையை(சந்தையை!) கைப்பற்றியுள்ளது.

தாரளமாய காலகட்டத்தில் தண்ணீரை “சரக்காக” மாற்றிய கார்ப்பரேட் முதலாளிகள், சுத்தமான குடிநீர் என்றும் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் வழங்குவோம் என்ற போலிப் பிரச்சாரத்தில்  நகர குடிநீர் விநியோகத்தை தனியார்மயப்படுத்த அரசுக்கும் அழுத்தம் கொடுத்து பணிய வைக்கின்றனர்.முதலாளித்துவ வர்க்கத்தின் முகமாக செயல்படுகிற அரசோ  பொதுத்துறை நிறுவனங்களின் உட்கட்டமைப்புகளை பலப்படுத்தாமல் தனியார் சேவையே சிறந்த சேவை என  தனது பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்கிறது. இந்தியாவில் இவ்வாறு தொலைத்தொடர்புத் துறை,போக்குவரத்து துறை ,வங்கி சேவைகள் என கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் அசுர வேகத்தில் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமப்படுத்தி வருவதை கண்டுவருகின்றோம்.இதன் தொடர்ச்சியாக குடிநீர் விநியோக கட்டமைப்பு தனியார்மயப்படுத்துகிற முயற்சியும் தற்போது வேகமாக நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில்தான் பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருந்துவந்த  கோவை நகர குடிநீர் விநியோக கட்டமைப்பு சூயெஸ் எனும் பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுகிறது.






இருபத்தி நான்கு மணி நேரமும் சுத்தமான குடிநீர் சேவை வழங்குவது என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினாலும் எதிர்காலத்தில் தண்ணீர் கட்டணத்தை இந்நிறுவனமே நிர்ணயத்து வசூலித்தாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை.கட்டணம் செலுத்தாதோர் வீடுகளின் குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது,தண்டம் வசூலிப்பது மட்டும் இல்லாமல் நகர குடிநீர் ஆதராங்களின் முழுவதும் தனது சொந்த கட்டுப்பாட்டில் எந்த கண்காணிப்பும் அற்ற வகையில் எடுத்துக்கொள்வது போன்ற ஆபத்துக்களை மக்கள் உடனடியாக உணரவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இத்திட்டத்தை பொறுத்தவரை,முதற்கட்ட திட்ட ஆய்வும் அடுத்த நான்காண்டில் திட்ட நடைமுறையாக்கம் மற்றும் அதற்கு பிறகான 22 ஆண்டுகாலத்திற்கு  பராமரிப்பு என மொத்தமாக 26 ஆண்டிற்கு சூயெஸ் நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் போட்டது.

கோவை மாநகர சுற்றுவட்டாரத்தின்  100  கிமீ பரப்பளவில் உள்ள சுமார் 1500  கிமீ குடிநீர் குழாய்கள், குடிநீர் தொட்டிகள், நீராதாரங்கள்,தானியாங்கி குடிநீர் மீட்டர்கள்,வால்வுகள்,1,50,000 குடிநீர் இணைப்பின் அனைத்து விநியோக சேவைகளும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வருகின்றன.இத்திட்ட அறிவிப்பு வெளியான சில நாட்களில், திட்டம் குறித்த குழப்பங்கள் வெளிப்படவே,மாநகர குடிநீர் சேவையை மட்டுமே இந்நிறுவனம் வழங்கும் மற்றபடி,மாநகராட்சியே வழக்கம்போல குடிநீர் கட்டணத்தை  நிர்ணயக்கும் என  மாநகராட்சி  விளக்கமளித்தது.இந்த விளக்கத்தின் உண்மைத்தன்மையானது போகப் போகத்தான் தெரியும்!

குடிநீர் விநியோக சேவையை தனியார்மயப்படுத்துகிற இந்த ஒப்பந்தத்தை பல்வேறு அரசியல் கட்சிகள், சூழலியல் அமைப்புகள் எதிர்த்தன.இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தன.இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபோது அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.இத்திட்டம் தொடர்பாக சூயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இணையதள பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி கண்டன அறிக்கை வெளியிட்டார்.இந்நிறுவனமானது பொலிவியாவில் மேற்கொண்ட அராஜக கட்டண வசூலும்,அதன் காரணமாக அங்கு எழுந்த போராட்டங்களையும் சுட்டிக் காட்டி,கோவை மாநகர குடிநீர் விநியோகத்தை தனியார்வசம் ஒப்படைப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகோ,இந்த திட்டத்தில் 13 விழுக்காடு முடிந்துவிட்டதாகவும் இனி நிறுத்துவதற்கு வாய்ப்பில்லை எனவும் நழுவிக்கொண்டது திமுக அரசு.

தனியார்மய குடிநீர் சேவை ஒப்பந்தங்கள்

குடிநீர் விநியோகத்தை பொதுத்துறை கட்டுப்பாட்டில் இருந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவது தேசிய நீர்க் கொள்கையின் பகுதியாகும்.கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியாவின் தேசிய நீர்க்கொள்கையில், நீர்த்தட்டுப்பாட்டை சரிசெய்யவும், நீர் விநியோக முறைகளை மேம்படுத்தவும்  நீர் சேவையில் தனியாரின் பங்களிப்பு அவசியம் என வாதிட்டது ஒன்றிய அரசு.இவ்வாதத்தை முன்வைத்தே இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி மாதிரியிலும் நீர் விநியோக/மேலாண்மை மீதான தனியாரின் ஆளுகைக்கு பொய்யான கருத்துருவாக்கத்தை மேற்கொள்கிறது.

நீர் /நீர் மேலாண்மை சேவை மீதான கட்டுப்பாட்டை தனியாருக்கு வழங்குவது தனியார்மய குடிநீர் சேவை எனலாம். இதுகாறும் நகராட்சி/மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த இச்சேவையானது தற்போது படுவேகமாக தனியாரின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.குடிநீர் சேவையில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்கள்,உலக வங்கி,பன்னாட்டு நிதியகம் போன்ற உலகின் மூலதன அதிகார அடுக்ககள் தங்களது  நவதாராளவாத சந்தைப்பொருளாதார ஏற்பாட்டின் வாயிலாக நீரை வர்த்தக பண்டமாக்கி விற்பனையில் ஈடுபட்டு லாபமீட்டுவதில் பெரு முனைப்புடன் வெறித்தனமாக ஈடுபடுகின்றன.

நீர் சேவை மீதான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி ஒரு திட்டத்தின் பேரில் தொடர்ச்சியாக லாபத்தை ஈட்டுவதற்கு உவப்பாக பல ஒப்பந்த மாதிரிகளை நீர் விநியோக பெரு நிறுவனங்கள் முன்வைக்கின்றன. இவ்வொப்பந்தங்களின் வாயிலாக நீர் சேவைக்கான உரிமையைப் பெறுகிற பெருநிறுவனங்கள் தங்கள் இஷ்டம் போல நீர் சேவைக்கான கட்டணத்தை வசூலிப்பதால் நடுத்தர வர்க்கத்தினரும் உழைக்கும் மக்களும் கடுமையான இன்னலுக்கு ஆளாகின்றனர். ஒரு கட்டத்தில் மொத்த வருமானத்தில் ஐம்பது விழுக்காட்டை குடிநீருக்கே  செலவு செய்ய வேண்டிய அளவுக்கு நீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது.இதன் விளைவாக குடிநீர் விநியோக  உரிமையைப் பெற்ற தனியார் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சி மிக்க போராட்டங்கள் வேகமாக வெடிக்கத்தொடங்குகிறது.இதற்கு மிகப்பெரும் உதாரணம் 2000 ஆம் ஆண்டில் பொலிவியாவில் சூயெஸ் மற்றும் பெக்டல் நிறுவனத்திற்கு எதிராக எழுச்சி பெற்ற போராட்டங்களாகும்.

பொதுவாக நீர் சேவையை தனியாருக்கு வழங்குவதில் உலகெங்கிலும் பல ஒப்பந்த மாதிரிகள் கடைபிடிக்கப்படுகிறது.அவை

சேவை ஒப்பந்தம்(Service Contract): இவ்வொப்பந்தத்தின்படி நீர்சேவை மீதான கட்டுப்பாடும் பொறுப்பும் பெரும்பாலும் அரசின் வசம் இருக்கும். அதாவது நீர் சேவைக்கான பராமரிப்பும் செயலாக்கமும் அரசின் பொறுப்பாகும். குறிப்பிட்ட இதர பகுதிகள் மட்டும் ஒப்பந்தத்தின் பேரில் தனியாருக்கு வழங்கப்படும். அதாவது அளவு காணல்,ரசீதளித்தல் போன்ற வேலைகளில் மட்டும்  தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும். ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு  வழங்கப்படும் இவ்வகையான சேவை ஒப்பந்தங்கள் மீதான  ஒழுங்குவிதி கண்காணிப்பிலும் (ஒப்பந்த)பேச்சுவார்த்தையிலும் பெரும்பாலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுவதில்லை.

கட்டுதல்,செயலாற்றுதல்,சொந்தமாக்குதல் மற்றும் கையளிப்பது- சுருக்கமாக பூட்(Boot) ஒப்பந்தம்(Built,operate,own,Transfer): இவ்வகையான ஒப்பந்தமானது நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும்  நீர் சேவைக்கான கட்டுமானத் திட்டம் போன்ற அதிக மூலதனம் தேவைப்படுகிற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது முதலீடு,கட்டுமானம்,செயலாற்றுதல் மற்றும் பராமரிப்பு என அனைத்தும் இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படுகிறது. இவ்வகையான பூட் ஒப்பந்தங்களில் குறைந்தபட்ச ஒப்பந்த காலமே இருபது ஆண்டுகள் ஆகும்! மேலும் இவ்வகை பூட் ஒப்பந்தமே பெரும்பாலான வளரும் நாடுகளில் கடைபிடிக்கபடுகிறது. தமிழகத்தின் திருப்பூர் முதல் பொலிவியாவின் கொச்சபம்பா வரை பூட்டே ஆதிக்கம் செலுத்துகிறது.தற்போது கோவையில் சூயசுடன் அரசு BOT ஒப்பந்தத்தை போட்டுள்ளது.அதாவது முதலீடு,கட்டுமானம்,பராமரிப்பு  மற்றும் கையளிப்பது.

மொத்த விற்பனைக்கான ஒப்பந்தம்(Divestiture):இவ்வொப்பந்தத்தில் அரசின் கட்டுப்பாடு முழுவதும் தளர்த்தப்பட்டு நீர் சேவையுடன் நீர் ஆதாரங்களையும் சேர்த்தே தனியாருக்கு கையளிக்கப்படும். இவ்வொப்பந்தத்தின்படியே சத்தீஸ்கரின் சிவ்னாத் நதியை இருபத்தி இரண்டு காலத்திற்கு ரெடியஸ் என்ற நிறவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டது.

சூயெஸ் நிறுவனத்தின் கடந்த கால வரலாறு:

அரசின் பொதுத்துறை குடிநீர் விநியோக அமைப்பைப் பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்த்தால் ஏற்படுகிற பின்விளைவுகளுக்கு  இன்றுவரை பொலிவியா எடுத்துக்காட்டாக உள்ளது.ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்றியமையாத வாழ்வாதாரத் தேவையான தண்ணீரை  சேவையாக கருதுகிற பொதுத்துறை கண்ணோட்டத்திலிருந்து தனியார்மயத்தின் கீழ் சந்தையாக மாற்றுவதென்பது அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரானது. அது மக்கள் நலன்களுக்கு நேர் எதிரானது.1980 களில் பொலிவியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயப் பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்டது.பொலிவியாவின் சமூக சிக்கல்களுக்கு ஏற்றத் தாழ்வுகளுக்கு சரியான திட்டங்கள் இல்லை என ஆளும்வர்க்க கருத்துருவாக்கம் மேற்கொள்ளப்பட்டு,பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளபட்டன. பன்னாட்டு நிதியகம்,உலக வங்கியின் கடன்களைப் பெற்ற பொலிவிய அரசு, அதற்கு மறுதலையாக நாட்டின் வளங்களை,பொதுத்துறை நிறுவனங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டது. உலக வங்கிக் கடன்களின் இலக்கும் அதுதான்.

இப்படியாக பன்னாட்டு மூலதனக்காரர்கள் தலைமுடி முதல் நகக் கால்வரை இரத்தம் சொட்ட சொட்ட பொலிவியாவில் இறங்கினார்கள். முன்னணி தண்ணீர் கொள்ளையர்களான பெக்டலும் சூயெசும் பொலிவியாவில் குடிநீர் விநியோக அமைப்பை கைப்பற்றினார்கள்.பொலிவியத் தலைநகரம் லாபாசின் எல் அல்ட்டோ பகுதியின் குடிநீர் விநியோகம் முழுவதும் சூயெசிற்கு கையளிக்கப்பட்டது. சேவைக்கும் சந்தைக்குமான முரண்பாடு உடனடியாக வெடித்தது..சூயெஸ் நிறுவனம், எல் அல்டோவில்  தண்ணீர் கட்டணத்தைத் திடுமென 30 விழுக்காட்டிற்கு உயர்த்தியது. நகர குடிநீர்க் குழாய்கள்,கிணறுகள் அனைத்திற்கும் பூட்டுப் போட்டது. புறநகரங்களில் முறையான குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன. சுயநல மூலதன முதலீடுகளுக்கும் சாமானிய உழைக்கும் மக்களுக்குமான போர் மூண்டது. சூயெஸ் நிறுவனத்தின் கோர சுரண்டலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்தனர். சூயெஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் வெடித்த இப்போராட்டம் 2005 இல் தீவிரம் பெற்றது. இப்போராட்டம் நுகர்வோர் கிளர்ச்சிஎன்றே பெயர் பெற்றது. போலவே பெக்டல் நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் கொச்சபம்பாவில் நடைபெற்றது.நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அரசு இறுதியில் ஒப்பந்தங்களை ரத்து செய்தது. அதேநேரத்தில் நிறுவனங்கள் நஷ்ட ஈட்டையும் பெற்றுக் கொண்டன!

இது ஏதோ பொலிவியாவில் நடைபெற்ற கதை என நம்மை ஆசுவாசப்படுத்துக் கொள்ளத் தேவையில்லை.ஏனெனில் இந்தியாவில் பல நகரங்களில் பல்வேறு பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் வேகமாக தண்ணீர் சந்தையில்கால் பதித்து வருகின்றன.பல்வேறு நகரங்களில் மாதிரித் திட்டங்கள்செயலாக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கான சந்தையை ஊக்குவிக்கிறது. சூயெஸ்,வியோல்லா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் டாட்டா,ரேடியஸ்,ஆரெஞ் போன்ற உள்நாட்டு முதலாளிகள் தண்ணீர் சந்தையைப் பிடிப்பதற்கு பல்வேறு வகையில்(கட்சிகளுக்கு நன்கொடை,பரிசுகள் உள்ளிட்ட) அரசியல் லாபிக்களை மேற்கொண்டு வருகின்றன.

குடிநீர் விநியோகம் மீதான உரிமையை பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்தால் ஏற்படுகிற மோசமான பின்விளைகளுக்கு உலக அளவில் இருந்து உள்ளூர் மட்டம் வரை எண்ணற்ற படிப்பினை உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலே இந்த ஒரு உதாரணமே போதும்!

இது ஏதோ கோவை நகரப் பிரச்சனை என்றோ,குடிநீர் கட்டண நிர்ணயப்பு உரிமையானது மாநகராட்சி வசம் மட்டுமே எப்போதும் இருக்கும் என்றோ நாம் பகல் கனவு கண்டு கொண்டிருக்க முடியாது! படிப்படியாக தங்களது கட்டுப்பாட்டில் நகரின் ஒட்டுமொத்த குடிநீர் விநியோகத்தைக் கொண்டு வருவது,பிற நகரங்களுக்கு அதை விரிவுபடுத்துவது என்ற நீண்ட கால தொலை நோக்கு திட்டத்தின்  அடிப்படையிலேயே இந்நிறுவனங்கள் குடிநீர் சந்தையை உருவாக்கி கைப்பற்றுகின்றன.சூயெஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனத்தை நாம் உடனடியாக விரட்டவில்லை என்றால்  பொலிவியா கதிதான் நமக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நன்றி:ஜனசக்தி 

ஆதாரம்:

https://www.bbc.com/tamil/india-59987553

https://www.thehindu.com/news/cities/Coimbatore/residents-to-receive-24x7-water-supply-soon-says-coimbatore-corporation/article66648677.ece

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jan/02/coimbatore-24x7-water-supply-project-to-drag-on-till-25-2533762.html

https://www.newsclick.in/dmk-takes-u-turn-suez-water-supply-project-coimbatore-feasibility-project-questioned

https://www.thehindu.com/news/cities/Coimbatore/call-to-cancel-water-project-awarded-to-suez-in-coimbatore/article66226483.ece