Pages

Saturday 25 June 2016

அணுசக்தி அரசியல்:அணுசக்தி விநியோக நாடுகளின் குழுவில் அங்கமாக முயன்றுவருகிற மோடி அரசின் ஆர்வம் குறித்த குறிப்புகள்...








அணுசக்தி விநியோக  நாடுகளின் குழுவில்(NSG) உறுப்பு நாடாக சேரத் துடிக்கிற இந்தியாவின் முயற்சி குறித்த விவகாரமானது முறையே

·         அமெரிக்கா ஏகாதிபத்தியம் தனது தெற்காசியப் பிராந்திய  புவிசார் அரசியலை இந்திய ஆதரவு மூலமாக வலுப்படுத்திக்கொள்வது

·         இதை நன்குணர்ந்த சீனா அதை கவனமாக கையாள்வது,குறிப்பாக இந்தியாவின் அமெரிக்கா சார்பை மட்டுப்படுத்திகொண்டும் அதேநேரம்  பாகிஸ்தானுடனான  நட்புறவை கைவிடாத வகையிலுமான வழிகளை  கைகொண்டுவருவது,

·         இந்தியாவின் பாஜக மோடி அரசு,உள்நாட்டில் சரிந்துள்ள தனது பிம்பத்தை தூக்கி நிறுத்த வாய்ப்பாக்கிக் கொள்வது,அதேவேளையில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இணையாக சர்வதேச அளவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வது.

என இம்மூன்று அம்சங்களை சுற்றியே கட்டப்பட்டுள்ளது.

அணுவாயுதப் பரவல் தடுப்பு உடன்பாட்டில்(NPT) கையெழுத்திடாத நாடுகள் அணுசக்தி விநியோக நாடுகளின் குழுவில் சேர இயலாது என்ற அதன் விதிமுறையை சுட்டிக் காட்டியும்,இதை அமெரிக்காவே முதன்மையாக வலியுறுத்திவருகிறது என்று கூறியும் வருகிற சீனா,இந்தியாவை நேரடியாக எதிராக நிறுத்திக்கொள்ளாமல் கவனமாக ஆவணங்களை மேற்கோள்காட்டிவருகிறது.



1962 இந்திய சீன போருக்கு பிற்பாடு தேக்கமடைந்த வர்த்தக உறவுகள் அதேமுறையில் தற்போதும் நீடிக்கவில்லை.அண்மைக் காலங்களில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவு வலுப்பட்டுவருகிற வர்த்தக சூழலலை கவனித்தில்கொண்டால் இந்த உண்மை விளங்கும்.இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளுக்குள் பிளவு வராமலும்,இந்திய ஆதரவுடன் ஆசியாவில் வலுக்கொள்ள முனைகிற அமெரிக்காவின் புவிசார் அரசியல் நகர்வை எதிர்கொள்வதும் சீன ஏகாதிபத்தியத்தின்  அக்கறைகளாக உள்ளன.


முன்னதாக 2008 ஆம் ஆண்டில் அணுவாயுதப் பரவல் தடுப்பு உடன்பாட்டில் கையெழுத்திடாத நாடுகளுக்கு சிவில் பயன்பாட்டிற்கான அணுசக்தியை வழங்கலாம் என்ற விலக்கை அமெரிக்காவின் அதீத அழுத்தம் காரணமாக அணுசக்தி விநியோக நாடுகளின்  குழு வழங்கியது.அதற்கும் முன்னதாக இந்தியாவின் அணுகுண்டு பரிசோதனைக்கு பிற்பாடு இந்தியாவிற்கு அணுசக்தி வழங்குவது மீதான தடையை 2005 இல் அமெரிக்கா தளர்த்தியது நினைவிருக்கலாம்.அதன் தொடர்ச்சியாகத்தான் மன்மோகன் அரசுடனான சிவில் அணுசக்தி வழங்குகிற ஒப்பந்தமான 123 ஒப்பந்தத்தை புஷ் அரசு மேற்கொண்டது. 

இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான  பீபுல்ஸ் டெய்லி இவ்வாறு எழுதியது 

“புவிசார் அரசியல் நலன் அல்லது வர்த்தக நலன் இரண்டில் ஏதோவொரு நோக்கத்தின் பொருட்டே இந்த (இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்)ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது”

“மேலும் இது சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்பாட்டிற்கு  பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது” 

அணுசக்தி சந்தை மற்றும் ராணுவமாக்களின் பொருட்டு அணுசக்தி மீதான  உலக நாடுகளின் கவனக்குவிப்பு, குறிப்பாக வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் அக்கறையாக  வளர்ச்சியடைந்துவருகிறது.

அணு உலைகள் மற்றும் அணு ஆயுத தயாரிப்புகளுக்கான  எரிபொருள்,தொழில்நுட்பம்,உபகரணங்கள் பரிமாற்றங்களை மையப்படுத்திய சந்தை விரிவாக்கம்,அதில்  ஏகாதிபத்திய நாடுகளின் பாத்திரம் குறித்த விவாதத்தை பரவலாக்க வேண்டிய தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது மேலுழும்பி வருகிறது.

தற்போது தென்கொரியத் தலைநகர் சியோலில்,அணுசக்தி விநியோக  நாடுகளின் குழுவின் வருடாந்திரக் கூட்டம் முடிவடைந்து விட்டது.உறுப்பு நாடாக சேர்க்கவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை மீதான விவாதம் தீர்மானம் எட்டப்படாமல் முடிந்துவிட்டது.இந்தியாத் தவிர பாகிஸ்தான்,இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கோரிக்கை விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.இச்சூழலில் மோடி அரசு அதன் ஆதரவு ஊடகங்கள்,இந்திய தேசியப் பற்றாளர்கள் கூறிவருகிற செய்தியாவது
·          
    இந்தியாவின் முயற்சியை சீனா தடுத்து விட்டது 

·         இந்தியாவின் முயற்சி குறித்து சியோலில் விவாதிக்கவாவது செய்தார்கள்,ஆனால் பாகிஸ்தான் கோரிக்கையை சட்டை செய்யவே இல்லை.இதுவே ஆகப் பெரும் வெற்றி 

·         சத்யா பிரதபால் என்ற அறிவுஜீவியோ,2008 ஆம் ஆண்டிலியே சிவில் அணுசக்தி இறக்குமதிக்கு விலக்கு அளித்துவிட்டார்கள்,இப்போது எதற்கு அணுசக்தி விநியோக  நாடுகளிடம் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்

என்ற விவாதங்கள் இந்திய தேசியவாத நோக்கில் சுற்றிவருவதைக் காண முடிகிறது.சரி ஒருவாதத்திற்கு இந்தியாவை ஆட்டத்தில் அணுசக்தி விநியோக  நாடுகளின் குழுவினர் சேர்த்துகொண்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.அப்போதைய செய்திகளாக 

காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை மோடி செய்தார்,பலமான பிரதமர் மோடி

வளர்ந்த நாடாக இந்திய மாறிவிட்டது.

போன்ற முழுக்கங்களை ஊடக கோஷ்ட்டியினர் முன்வைப்பதை கேட்டிருக்கலாம்.மாறாக இந்தியாவின் மொத்த  மக்கள் தொகையில் 30 கோடி பேர் மிக மோசமான வறுமை நிலையில் வாழ்கின்றனர் ' என்ற ஐநாவின் தகவல்கள் தேச வளர்ச்சிக்கான காரணிகளில் கொள்ளப்பட மாட்டாது!

அனுமானங்களை விட்டுவிடுவோம்,

ராணுவ தொழில்நுட்பம் சார்ந்தும் சிவில் பயன்பாடு சார்ந்தும்  அணுசக்தி எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை வணிகப்படுத்தும் வகையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்கான இடையிலான சடுதியில் தேசியவாதப் போர்வையில் ஊடாக மக்களை மயக்குகிற/மடைமாற்றுகிற ஆளும் அரசு அவர்களுக்கு இசைவான ஊடகங்கள்,அறிவு ஜீவிகளை புறக்கணித்து அணுசக்திக்கு எதிரான போராட்டத்தை முன்னகர்த்துவதே நமது கடமையாக உள்ளது.