Pages

Friday 5 August 2016

முதலாளித்துவமும், சூழலியல் அழிவும்: ஜான் பெல்லாமி பாஸ்டர்






(2011 ஆம் ஆண்டில்,வால் ஸ்ட்ரீட் முற்றுகை, கல்விக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில்”முதலாளித்துவமும், சூழலியல் அழிவும்”என்ற தலைப்பில் உரையாற்ற எழுதப்பட்டக் குறிப்பே இக்கட்டுரை)

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடாகவே,வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் எழுச்சி பெற்றது.மேலும்,இந்நெருருக்கடிக்கான விலையை, ஒரு சதவீத மக்களுக்கு  பதிலாக 99 சதவீத மக்களே கொடுத்தனர்.அதேநேரத்தில்,நோமி கிளீன் கூறுவது போல,புவிக்கோளத்தை அழிக்கிற அதன்(முதலாளித்துவத்தின்)செயல்பாடே “முதலாளித்துவத்தால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரும் அச்சுறுத்தலாக” உள்ளது.ஆகையால் முதலாளித்துவத்தை விமர்சிப்பது,நிச்சயம் தவிர்க்க முடியாத ஒன்று.

முதலில்,நிலவுகிற சுற்றுச்சூழல் சிக்கல்களின் வீரியத்தன்மை  குறித்த வாதத்திலிருந்து எனது உரையை தொடங்குகிறேன்.பின் அதனுடனான முதலாளித்துவத்தின் உறவு குறித்த கேள்விக்கு வருகிறேன்.அப்போதுதான் சூழலியல் அழிவை தடுப்பதற்கான எதார்த்த நிலையிலிருந்து பேச முடியும்.
சூழல் சிக்கல்கள் எவ்வளவு மோசமானது?வளிமண்டலத்தில் உமிழப்படும் கரி வாயு மற்றும் பசுமைக்குடில் வாயுக்கலானது,வெப்பக்கதிர்களை பூமிக்குள் ஈர்த்து அனுப்பவதால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்தும்,அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நீங்கள் அனைவரும் நன்கு அறீவீர்கள்.புவி வெப்பமயமாக்கலால், கணக்கற்ற வகையில், பல்லுயிரனங்களின் வாழ்வும்,மனிதனின் இருப்பும் பெரும் அச்சுறுத்தலக்குள்ளாகியுள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமற்று வகையில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.உண்மை என்னவென்றால்,இந்நாட்டின் முதன்மையான  வானியலாளர்,ஜேம்ஸ் ஹான்சன் கூறுவது போல்”மனித இனத்தைக் காக்க,நம்முள் உள்ள இறுதி வாய்ப்பாக”க் கூட அது இருக்கலாம்.

ஆனால்,காலநிலை மாற்றம் என்பது ஒட்டுமொத்த சூழலியல் சிக்கல்களில் ஒரு கூறு மட்டுமே.ஸ்டாக்ஹோல்ம் மையத்தின் முன்னணி விஞ்ஞானிகள் சமீபத்தில் சுட்டிக்காட்டியது போல்,நாம் இதுவரை ஒன்பது “புவி எல்லைகளை” மீறிவிட்டோம் அல்லது நெருங்கிவிட்டோம்.அவை-காலநிலை மாற்றம்,கடல் அமிலத்தன்மை அதிகரிப்பு,ஒசோன் மெலிவு,உயிர்-புவி வேதிப்பொருள் ஒழுக்கு  எல்லை,உலக நன்னீர் பயன்பாடு,நிலப் பயன்பாட்டு மாற்றம்,பல்லுயிரிய அழிவு,வளிமண்டல  தூசுப்படல அதிகரிப்பு மற்றும் வேதியல் மாசு ஆகும்.ஒவ்வொரு புவிக்கோள எல்லை மீறல்களும்,புவியின் ஒட்டுமொத்த சூழலியல் சிக்கல்களில் தீர்மானகரமான பங்களிப்பு செய்கின்றன.உண்மை என்னவென்றால்,இதில் காலநிலை மாற்றம்,பல்லுயிரியம் மற்றும் நைட்ரஜன் சங்கிலியில் ஏற்பட்ட தகர்வு  என்ற மூன்று புவிக்கோள் எல்லைகளை கடந்துவிட்டோம் என்பதே!


இதனால் ஏற்படுகிற சூழலியல் சிக்கல்களையே நடைமுறையில் அனுபவிக்கிறோம்.நாம் தற்போது வாழ்ந்து வரும் காலத்தை ‘ஆறாவது அழிவுக்காலம்’ என விஞ்ஞானிகள் வரையறுக்கிறார்கள்.6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த கடைசி அழிவில்தான்  டைனோசர்கள் இனங்கள் அழிந்தன.ஆனால் இக்காலகட்டத்தில், உலகின் அனைத்து உயிரினங்களின் வாழ்வும் ஒரு இனத்தால் அழிவை சந்திக்க இருக்கிறது-அது மனித இனம்.மனித இனத்தின் செயல்பாடுகளே தற்போதைய அழிவிற்கு காரணமாக உள்ளன. நைட்ரஜன் சங்கிலியின் சிதைவானது,கடலோரப் பகுதிகளில் “இறந்த மண்டலங்களை”அதிகரிக்கச்செய்கிறது. கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பானது ,பருவநிலை மாற்றத்தின் விளைவால் ஏற்பட்டஇரட்டைக் கேடு”களில் ஒன்றாகும். அதாவது,ஒருபக்கம் வளிமண்டலத்தில் கரிவாயு வெளியீட்டு வீத அதிகரிப்பால், பருவநிலையானது மாற்றமடைகிறது.இதற்குச் சமமாக,மற்றொரு பக்கத்தில் கடல்களை அச்சுறுத்துவதன் வாயிலாக புவிக்கோளத்தின் அமைப்பில் பிளவை உண்டாக்குகிறது.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது,அனைத்தும் கைமீறிச் சென்றுவிட்டதைப் போலத் தெரிகிறது.நித்தமும் நம்மை அச்சுறுத்தும்,இவ்வனைத்து புவிக்கோளச் சூழல் சிக்கல்களை/சிதைவை, நாம் எவ்வாறு சமாளிக்கப் போகிறோம்? நமது புவிக்கோள அமைப்பின், அனைத்து பிளவுகளை,உலகளாவிய உற்பத்தி அமைப்போடு தொடர்புபடுத்தி பார்ப்பது நமக்கு அவசியாமாகிறது-அதாவது  முதலாளித்துவம்! வழக்கமானப் பாணியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நடப்பு உற்பத்திமுறையை  அகற்றும் விதத்திலான,நிலவுகிற உற்பத்தி அமைப்பில் அடியோடு மாற்றத்தை ஏற்படுத்த, நம்மை நாம் தயார் செய்துகொண்டால்,நம்மைச் சுற்றியுள்ள நிலைமைகளை மாற்ற,சிறிது கால அவகாசம் கிடைக்கும்.இவ்வகாச காலம் முடிவதற்குள், நாம் விரைவாக செயல்பட்டாக வேண்டும்.

காலநிலை மாற்றமென்பது,ஒட்டுமொத்த சூழலியல் சிக்கல்களில் ஒரு கூறு மட்டுமே என்பதை நினைவில் வைத்து,அது குறித்து மட்டும் இப்போது பேசுவோம்.ஏனெனில் அதுவே தற்போதைய அவசர சிக்கலாக இருக்கிறது.வானிலை விஞ்ஞான ஏடொன்றின் கருத்துப்படி,தற்போது இருப்பில் இருக்கிற கச்சா எண்ணெய்,எரிவாயு மற்றும் நிலக்கரி போன்றவற்றில் பாதி அளவு எரித்தால் கூட,அது உலகின் தட்பவெப்பத்தை உயர்த்திவிடும் என்கிறது.மேலும் அது மீண்டுவர முடியாது விளிம்பிற்கு நம்மைத் தள்ளி,தொழில் யுகத்திற்கு திரும்பி வர முடியாத அசாதாரண நிலைக்கு இட்டுச்சென்றுவிடும். அந்நேரத்தில் மீட்கமுடியாத பல மாற்றங்களானது,தடுக்க முடியாத கட்டத்திற்குச் சென்றுவிடும்.அது காலநிலை மாற்றத்தை 2 பாகைக்கு அதிகரிக்கச்செய்வதோடு கடல்மட்டத்தின் உயர்வு மற்றும் மோசமான வானிலை போன்ற சூழலியல் சிக்கல்களையும் விரைவுபடுத்திவிடும்.மறு வாய்ப்பாக,இருப்பில் இருக்கும் புதைபடிம பொருட்களில் கால்வாசி மட்டும் எரித்தால் உலகின் தட்பவெப்பத்தை நாம் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என வானிலை விஞ்ஞான ஏடு தெரிவிக்கிறது.

இவை அனைத்தின் மையச்சிக்கலான “மீண்டுவர முடியாத”தன்மையை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.மேலும்,புதைபடிம பொருட்களை எரிப்பதை கட்டுப்படுத்தவேண்டும்;அப்போதுதான் தட்பவெட்ப நிலையை 2 டிகிரி மேல் மிகாமல் வைத்திருக்க முடியும்.அப்படி இல்லாமல்,அதன் எல்லைகளை நாம் தொட்டுவிட்டால்,மீண்டுவரமுடியாத சூழலில் மனிதனை நிறுத்திவிடும்.இவ்வழிவு நிகழ்துவிட்டால்,அது அனைத்துவித அழிவிற்கான திறவுகோலாக அமைந்துவிடும்.

அண்மையில் உலகின் முக்கிய அறிவியல் பிரசுரமான “நேச்சர்”இதழில் புவிக்கோளத்தின் எல்லைகள்,காலநிலை மாற்ற சிக்கல்கள் குறித்த கட்டுரைகளை முன்னணி அறிவியலாளர்கள் எழுதியிருந்தனர்.அதில் ஒட்டுமொத்தமாக எந்தளவிற்கு கரிவாயு வெளியீட்டை இப்புவிமண்டலம் தாங்கக் கூடும் என்ற அவதானிப்பு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.அதாவது ஒரு ட்ரில்லியன்  டன் கரிவாயு வெளியீட்டை உச்சப்பட்ச எல்லையாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்போதைய நிலவரப்படி,அதாவது தொழில்யுகத்திற்கு பிந்தைய (1750 பின் தற்போது வரை)காலம்வரை சுமார் 500 டன் பில்லியன் கரிவாயுவிற்கு மேல் வெளியிட்டிருக்கலாம் என தெரிக்கிறது.அடுத்த பதினாறு ஆண்டுகளில் அதாவது, 2028 ஆம் ஆண்டில் மேலும் 750 டன் பில்லியன் கரிவாயு,நடப்பு கணக்கோடு சேர்ந்துகொள்ள நேரிடும் என்கிறது.இந்த வேகத்தில் போனால்,அடுத்த நாற்பது ஆண்டுகளுக்குள்ளாகவே  எல்லையை கடந்துவிடுவதாக தெரிகிறது.எனவே,அதன் வளர்ச்சி வீதத்தை ஐந்து விழுக்காடிற்கு மாறாக இரண்டரை விழுக்காடாக குறைத்தால் மட்டுமே அதிவேக கரிவாயு வெளியீட்டை கட்டுப்படுத்த இயலும்.எவ்வளவுக்கு எவ்வளவு கரிவாயு வெளியீட்டு வீதத்தை குறைக்கிறோமோ அந்தளவிற்கு வாழும் காலத்தை நீட்டிக்க இயலும்.ஒருவேளை இதை செய்யத் தவறும்பட்சத்தில்,அதாவது ஒரு ட்ரில்லியன் அளவை எட்டிவிட்டால்,நிலைமை நம் கை மீறியதாக போகிருக்கும். 

இவையெல்லாம் சமூகக் கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது.காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளையும் அதற்கான காரணங்களையும் புரிந்துகொள்ள காலநிலை அறிவியலைக் கடந்து, சமூக அறிவியல் நோக்கி நமது பார்வையை செலுத்தவேண்டும்.இப்பிரச்சனை சமூக முரண்பாட்டு பிரச்சனையாக உள்ளது.அதாவது,மூலதனத்தை மென் மேலும் குவிகிற முதலாளித்துவ சமூகமாக நமது சமூகம் உள்ளது.இதில்தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.சமூகத்தின் ஒரு விழுக்காட்டினராக உள்ள இவர்களே பொருளாதார வளர்சிகளை கட்டுப்படுத்துபவர்களாக,ஆளுமை செலுத்துபவர்களாக உள்ளனர்.இவ்வமைப்பின் உள்முரண்பாடுகள் காரணமாக சில தேக்க நிலைகளுக்கு அவ்வப்போது வரலாம்,ஆனால் இவ்வமைப்பை தடுத்து கட்டுப்படுத்துகிற சமூக நிறுவனங்கள் ஒன்றுமில்லை.இவ்வமைப்பின் பொருளாதார தேக்க நிலைகள்,சுற்றுச்சூழலுக்கு தற்காலிக நலனை அளித்தாலும் சமூகத்திற்கு கேடாக முடிகிறது.வேலை வாய்ப்பின்மை,வருமானக் குறைவு என 99 சதவீத உழைக்கும் வர்க்கமே இச்சிக்களால் மோசமான பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

தொடர்ச்சியான வளர்ச்சியே முதலாளித்துவத்தின் நோக்கமாகும்.இயக்கமற்ற ஜடமாக  இவ்வமைப்பால் இருக்க இயலாது.குறைந்தது மூன்று விழுக்காட்டு வளர்ச்சி வீதத்திலாவது அது வளர்ந்துகொண்டே இருக்கும்.அப்படியானால் ஒவ்வொரு 24  வருடத்திலும் நமது பொருளாதார வளர்ச்சி இரு மடங்காகக் கூடிக்கொண்டு போகும் அல்லவா?அப்படியென்றால் இத்தனை மடங்கு வளர்ச்சிக்கான  வளங்களை நமது புவியால் கொடுக்க இயலுமா?

ஆகவே,முதலாளித்துவத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையில் ,நேரடியாக வளர்ந்து வருகிற இம்முரண்பாடுகள்,புவியின் உயிர்-வேதியியல் சார் இயற்கை போக்குகளை பாதிப்பிற்குள்ளாக்குகிறது.இதைத்தான் நோமி கிளீன் “அழிவு முதலாளித்துவம்”என சரியாகவே சுட்டிக்காட்டினார்.ஏனெனில் பொருளாதாரத்தையும் சீரழித்து சூழலியல் அழிவையும் ஏற்படுத்துகிற இரட்டை கேட்டை இம்மைப்பு வேகான வகையில் நிகழ்த்திவருகிறது.

 நிலவுகிற பொருளாதார பண்பாட்டை மாற்றுவதே தற்போதைய தேவையாகும்.அதாவது ஒரு சூழலியல் சமூகப் புரட்சி அவசியமாகிறது.நம்மிடம் இன்று அனைத்து தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும்,இவை வெறுமனே தொழில்நுட்பம்சார்ந்த பிரச்சனையாக பார்க்க முடியாது.ஏனெனில் முடிவே இல்லாத வகையில் இயற்கை வளங்களை அதன் வரம்பிற்கு மீறிய சுரண்டுவது என்பது முதலாளித்துவத்தின் நோக்கமாக உள்ளது.எனவே இப்பிரச்சனைக்கு பகுதிசார்ந்த மக்களை அணிதிரட்டுவது எவ்வளவு அவசியமோ அதே போல சர்வதேச அளவில் ஒன்றிணைவதும் அவசியமாகிறது.

ஆங்கிலக் கட்டுரை:http://mrzine.monthlyreview.org/2011/foster291011.html

No comments:

Post a Comment